புதுடெல்லி: தனது சுயசரிதை புத்தகமான ‘கேம் சேஞ்சர்’ குறித்து விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கடும் பதிலடியைக் கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், தற்போது பா.ஜ. கட்சியின் மக்களவை உறுப்பினர்.

அந்தப் புத்தகம் குறித்து கருத்துக்கூறிய அஃப்ரிடி, “இந்திய அணியில் பலர் எனக்கு நல்ல நண்பர்களாக உள்ளனர். ஆனால், கம்பீர் எப்போதும் எனக்கு நண்பர் கிடையாது. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரிடம் கிரிக்கெட் சாதனை கிடையாது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கம்பீர், “அஃப்ரிடியைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை. சிலர் இன்னும் வளரவில்லை. அவர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் அவர்களின் மூளை வளரவில்லை. அஃப்ரிடி ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் செய்ய முயல்கிறார். அவர் பேசாமல் அரசியலில் சேர்ந்துவிடுவது நல்லது” என்றுள்ளார்.

கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின்போது, இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் பலமுறை மோதிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய வடிவத்தில் மோதிக்கொண்டுள்ளனர்.