டில்லி:

கில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு அமல்படுத்தி உள்ள  ஜி.எஸ்.டி. வரியை ‘கப்பர் சிங் வரி’ என்று வர்ணித்து வருகிறார்.

நேற்று அசாமில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருட்களுக்கு வரிகள் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

 

நாட்டின் மீது கப்பர் சிங் வரியை சுமத்தவிட மாட்டோம். சிறு, நடுத்தர தொழில்களின் முதுகெலும்பை முறிப்பதையோ, லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகளை பறிப்பதையோ அனுமதிக்க முடியாது.

அதற்கு பதிலாக, நிஜமான எளிய வரியை கொண்டு வாருங்கள். வெறும் பேச்சளவில் செயல்பட்டு, நாட்டின் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் திறமையின்மையை ஒப்புக்கொண்டு, ஆணவத்தை கைவிட்டு, சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.