சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும்  வகையில்,  கூகுள் பே, போன் பே உள்பட ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி  நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம்மும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கண்காணித்து வருகிறது. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்பட எந்தவித இலவசமும் கொடுக்கப்படாதவாறு, பறக்கும் படைகளை ஏற்படுத்தி கண்காணிக்கிறது. மேலும், வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், தற்போது, ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, போன் பே உள்பட பல்வேறு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றவர், இதுதொடர்பாக   வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றவர், மேலும்,  பயன்படுத்தாத வங்கி கணக்கில் திடீர் பண பரிவர்த்தனை நடந்தால் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் 2 பேர் திங்கட்கிழமை தமிழகம் வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.