சென்னை: கர்நாடக மாநிலத்தில் காவிரி தண்ணீர் திறப்புக்கு எதிராக நடத்த போராட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்துக்கு இறுதி மரியாதை மற்றும் அவரது உருவப்படங்கள் எரிப்பு மற்றும் கிழிப்புகள் நடைபெற்றது. இதை, சித்தராமையான தலைமையிலான  கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இந்த சம்பவங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

காவிரி விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்து வந்தாலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. இதற்கு இங்குள்ள திமுக அரசோ, காங்கிரஸ் கட்சியோ குரல் கொடுக்காமல், நீதிமன்றத்தை நாடியது. அதன்படி, உச்சநீதிமன்றமும் தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாமல் கர்நாடக காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வருகிறது.

 காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கவே கூடாது என்கிறது கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து  அங்கு முழு அடைப்பு நடைபெற்றது.  இந்த பந்தை, கர்நாடகா அரசு தடுக்காது, பந்த் போராட்டம் நடத்தலாம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.

மாநில காங்கிரஸ் அரசு ஆதரவு இருந்ததால், கர்நாடகாவில் பந்த் வெற்றிகரமாக நடைபெற்றது. கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பெங்களூர் பந்தின்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்திற்கு கன்னட அமைப்பினர் பொட்டு வைத்து, மாலையிட்டு, திதி கொடுக்கும் இழி செயலை செய்தனர். பின்னர் பெண்கள், முதல்வர் ஸ்டாலின் உருவப் படம் முன்பு ஒப்பாரிப் போராட்டம் நடத்தினர். கன்னட சாலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், ஸ்டாலின் உருவப்படத்தை கிழித்து எரிந்து காலில் மிதித்து அவமானப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகின.

இதையடுத்து,  கன்னட அமைப்பினருக்கு பதிலடி தரும் வகையிலும் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவப் படத்திற்கு மாலையணிவித்து, ஒப்பாரி வைத்து, சாம்பிராணி போட்டு திதி கொடுத்தனர். இது கர்நாடக மாநிலத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் சித்தராமையா அரசை கண்டிக்க தகுதியற்ற அழகிரி, முதலமைச்சர் ஸ்டாலின் உருவபடத்தை எரித்ததற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் ஆதரவு பெற்ற ஒரு குழு காவிரி நீர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடைய படத்தை வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி ஒழுங்காற்று ஆணையமும், உச்சநீதிமன்றமும் என்ன தீர்ப்பு சொல் லியிருக்கிறார்களோ, அந்த தண்ணீரை நாம் கேட்கிறோம். நீரின்றி பயிர்கள் கருகுகின்றன. தமிழக விவசாயிகள் சொல்லொணா துயரம் அடைகிறார்கள்.

ஆனாலும் தமிழக மக்களும், தமிழக விவசாயிகளும், தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் எல்லை மீறாமல், உணர்ச்சியை தூண்ட விடாமல் பொறுப்பான தன்மைகளோடு நம்முடைய கோரிக்கையை வைத்து வருகிறோம். ஆனால், கர்நாடகத்தில் வேறு விதமாக இருக்கிறது. அங்கிருக்கிற பாரதிய ஜனதா இதை அரசியலாக்கும் முயற்சியில் இரண்டு மாநில மக்களுக்கிடையே வன்மத்தையும், வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கிறது. தமிழகத்தில் கூட விவசாயிகள் சங்கம் ரயில் மறியல் செய்தார்கள். அதில் வன்முறை நிகழாமலும், அதேநேரத்தில் எல்லை மீறிய ஒருசிலரை மற்றும் அதன் தலைவரை காவல்துறை கைது செய்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது.

இதேபோன்ற ஒரு நிலைமை கர்நாடகத்திலும் வர வேண்டும். அனைத்து கட்சிகளும் அரசியல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில அரசு வன்முறையில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.