டில்லி:

மோடி அரசின் கடைசி பட்ஜெட்டான  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மோடி அரசின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின்போது  பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விவசாயிகள் புறக்கணிப்பு போன்றவற்றால் மக்களை பாஜக அரசு கடுமையாக வதைத்து வந்த நிலையில், தற்போது வாக்கு வங்கியை கருத்தில்  கொண்டு சில சலுகைகளை அறிவித்து உள்ளது.

தற்போது 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மோடி அரசுக்கு இதுவே கடைசி  பட்ஜெட்.  அதன் காரணமாக தற்போது வரி செலுத்துபவர்களின் வாக்குகளை பெற வருமான வரி வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது.

இதுவரை வருமான வரி வரம்பு ரு.2.5 லட்சமாக இருந்து வந்தது தற்போது அதை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக 3 கோடி வரி செலுத்துபவர்கள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை.

இதுதவிர தனிநபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் நிரந்தர கழிவு வழங்கப்படும். 

ரூ.6.5 லட்சம் வரை மொத்த வருவாய் உள்ளவர்கள், வைப்பு நிதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் உள்ளிட்ட வரிசேமிப்பு திட்டங்களில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்திருந்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.

டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை.

வாடகை வருவாய் வரிப்பிடித்த உச்சவரம்பு ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிப்பு. 2013 – 14 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் வரி வருவாய் 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

வரி செலுத்துவது எளிமை ஆக்கப்பட்டதால் தான் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நடுத்தர வர்க்க மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு முடிவெடுத்தது.

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உயிரிழக்க நேரிட்டால் ஆறு லட்சம் ரூபாய் நிதியுதவி. அதேபோல அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்டத்தின்கீழ் பணிபுரிவோருக்கான மதிப்பூதியம் 50 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க திட்டம்.

வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்  அறிவிப்பு.

ஷிரம் யோகி என்ற பெயரிலான திட்டத்தின்கீழ் முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஷிரம் யோகி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, இந்த திட்டத்தின்கீழ் மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு அளிக்கப்படும். அதற்ககாக ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு 3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு என அறிவிப்பு