சென்னை: தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடை திறந்திருக்கும் பணி நேரமும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல்  தடுப்பு நடவடிக்கையாக 6ந்தேதி முதல் 15ந்தேதி வைரை புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்ட்டுள்ளன. அதன்படி, கடைகள் அலுவலகங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம். , ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லை. மளிகை, காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை.

உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அத்துடன் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பு நேரம் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மதியம் 12 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.