பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் நிலைதடுமாறி உயிரிழந்த சுபஸ்ரீயின் படத்திற்கு, மெழுவர்த்தி ஏற்றி அவரது நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயதான சுபஸ்ரீ என்கிற இளம்பெண், பள்ளிக்கரணை அருகே சாலையில் நேற்று சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அச்சாலையின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அதிமுக பிரமுகர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது தண்ணீர் லாரி ஒன்று ஏறி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

சுபஸ்ரீயின் மறைவை தொடர்ந்து, சமூகவலைதள வாசிகள், அரசியல் பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், சென்னை மேற்கு தாம்பரத்தில் சுபஸ்ரீயின் நண்பர்கள் தரப்பில், அவரின் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மெழுவர்த்தி ஏற்றிவிட்டு, இதுநாள் வரை நடந்த பேனர் கலாச்சார தவறுகளை கண்டிக்க தவறிவிட்டோம் என்றும், இனியும் அதுபோல நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம் என்றும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.