டெல்லி: அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு குறித்து நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான குழுவை ஒரு வாரத்திற்குள் அமைக்க அறிவுறுத்தி உள்ளது.

அரசியல் கட்சிகள் மக்களிடையே இருந்து வாக்குகளை பெற இலவசங்களை தேர்தல் வாங்குறுதிகளாக வழங்கி ஆட்சி கைப்பற்றி வருகின்றன. இந்த இலவசங்கள் ஒருபுறம் மக்களுக்கு சலுகையாக அமைந்தாலும், மற்றொருபுறம் மக்களை சோம்பேறிகளாகக்குவதுடன், வரி உயர்வு போன்றவற்றை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளிவிடுகிறது. இதனால், இலவசங்கள் அறிவிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மூத்த வழக்குறிஞர் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில்,  ‘தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன. இது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதோடு, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் பாதிக்கும். அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக, வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது. எனவே, இலவசங்களை அறிவிப்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டப் பிரிவு 14 உள்பட பல்வேறு அரசியலமைப்புச் சட்ட பிரிவுகளை மீறிய நடவடிக்கை என உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மேலும், இவ்வாறு இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் தோ்தல் சின்னத்தை முடக்குவது அல்லது கட்சிகளின் பதிவை ரத்து செய்வது அல்லது இரண்டு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுமீதான விசாரணை , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போத மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின்போது, தோ்தல் ஆணையம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘இலவசங்கள் அறிவிப்பது என்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். தோ்தல் ஆணையம் அல்ல. ஒரு மாநிலத்தின் கொள்கை மற்றும் தோ்தலில் வெற்றிபெற்ற கட்சி ஆட்சி அமைக்கும்போது எடுக்கும் முடிவுகளை தோ்தல் ஆணையம் ஒழுங்குபடுத்த முடியாது’ என்று கைவிரித்து விட்டது. ஆனால், மத்தியஅரசோ,  ‘இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம்தான் ஒழுங்கு படுத்த வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்தை கைகாட்டியது.

இதனால் கோபமடைந்த தலைமைநீதிபதி,  ‘இந்த விவகாரத்தில் உரிய நிலைப்பாட்டை எடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? அரசியல் கட்சிகளின் இலவச திட்ட அறிவிப்புகள் தொடர வேண்டுமா அல்லது கூடாதா என்ற முடிவை மத்திய அரசு முதலில் எடுக்கட்டும். அதன் பிறகு நாங்கள் இந்த விவகாரத்தில் முடிவை எடுப்போம். எனவே, இதுதொடா்பான விரிவான பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை த்தி வைத்தது.

இந்த நிலையில், கடந்த விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தா, தேர்தலுக்கு முன் இலவசங்களுக்கு எதிரான மனுவை மத்திய அரசு ஆதரிக்கிறது என்றும்,  “இலவசங்கள்” பொருளாதாரத்திற்கு பேரழிவு என்றார். மேலும்,  ‘இந்த விவகாரத்தில் நிதி ஆணையம்தான் உரிய நடவடிக்கையை எடுக்க முடியும். எனவே, இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு நிதி ஆணையத்துக்கு அழைப்பு விடுக்கலாம். ஏனெனில், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கும் என எதிா்பாா்க்க முடியாது. அவ்வாறு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்குவது பல்வேறு அரசியல் பிரச்னைகளை உருவாக்கிவிடும்’ என்று யோசனை தெரிவித்தாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் இலவச திட்ட வாக்குறுதிகள் அளிக்கும் விவகாரத்தை நிதி ஆணையத்திடம் ஒப்படைக்கும் யோசனை குறித்தும் மத்திய அரசு பதிலளிக்குமாறு கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதற்கு தீா்வு காணும் வகையில் உரிய கருத்தைத் தெரிவிக்குமாறு, வேறொரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபலிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

அத்துடன், தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க  நிதி ஆயோக், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய உச்ச அமைப்பு தேவை என்று கூறிய  தலைமைநீதிபதி,  மத்திய தேர்தல் ஆணையம், மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கபில்சிபல் மற்றும் மனுதாரர்கள், இலவசங்களை எப்படி முறைப்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் நிபுணர் குழுவை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிதி ஆயோக், அரசியல் கட்சிகள், நிதி ஆணையம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களிடையேயும் “இலவசங்களின்” நன்மை தீமைகள் குறித்து விரிவான ஆலோசனையை எஸ்சி விரும்புகிறது என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.