புனே: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி ( வயது 81)  காலமானார்.

சுரேஷ் கல்மாடி ரயில்வே துறைக்கான மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றியவர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முன்னாள் தலைவராகவும் இருந்தவர். வயது முதிர்வு காரணமாக  புனேவில்  உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.  சுரேஷ் கல்மாடி, நீண்டகால நோய்க்குப் பிறகு, புனேவில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6, 2026) அதிகாலை 3.30 மணி அளவில்  காலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

மறைந்த கல்மாடிக்கு  மனைவி, மகன் மற்றும் மருமகள், இரண்டு திருமணமான மகள்கள் மற்றும் மருமகன், அத்துடன் பேரக்குழந்தைகள்  உள்ளனர்.

நரசிம்மராவ் (1991–1995) ஆட்சி காலத்தில் ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்த அவர், பல ஆண்டுகளாக தேசிய அளவில் விளையாட்டு நிர்வாகத்துடன் தொடர்புடையவராக இருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி, 2010ல் காமல்வெல்த் முறைகேட்டில் சிக்கி சிறை சென்றார்.

கட்சி பாகுபாடின்றி தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் மற்றும் பொது வாழ்க்கைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் புனேவின் எரண்ட்வானே பகுதியில் உள்ள கல்மாடி இல்லத்தில் மதியம் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிச் சடங்குகள் நவி பேட்டையில் உள்ள வைகுந்த் மயானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.