பெங்களூரு:
கர்நாடக மாநில கூட்டணி அரசு அடுத்த ஆண்டு (2020ம்) ஆண்டு கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற சபாநாயகரான கோலிவாட் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு நடை பெற்று வருகிறது. மாநில முதல்வராக குமாரசாமியும், துணைமுதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வராவும் இருந்து வருகின்றனர். கூட்டணி மந்திரி சபை ஆட்சி செய்து வருகிறது.
இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக ரகசிய முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், குமாரசாமி அரசு மீது காங்கிரஸ் கட்சியினரும் அதிருப்தியில் உள்ளனர். அவ்வப்போது, குமார சாமி அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற சபாநாயகரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.பி.கோலிவாட் இன்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக கூட்டணி அரசு அடுத்த ஆண்டு முதல் காலாண்டு கால கட்டத்தில் கவிழும் என்றும், அடுத்த ஆண்டு கர்நாடக சட்ட மன்றத்துக்கு இடைத்தேர்தல் வரும் என்றும் கூறி உள்ளார்.
கோலிவாட்டின் பேச்சு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.