புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரான லட்சுமி நாராயணன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் இன்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்களே, தங்களது பதவிகளை ராஜினாமா செய்து ஆட்சி கவிழ காரணமாக அமைந்தனர். அதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமாக இருந்த லட்சுமி நாராயணன் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆட்சிக்கு எதிராக களமிறங்கினார்.  இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து   கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக லட்சுமி நாராயணன்,  காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில்   லட்சுமி நாராயணன், இன்று தனது ஆதரவாளர்களுடன் புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில்  என்.ஆர்.காங்கிரசில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “லட்சுமிநாராயணன் இணைந்தது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுவூட்டி உள்ளது. நான் முதல்வராக இருந்த போதே நல்ல முறையில் பணியாற்றியவர் லட்சுமி நாராயணன். ஆளுங்கட்சியில் இருந்த போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் லட்சுமிநாராயணன். காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை” என்று கூறினார்.