சென்னை:
வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி மோசடி செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கொளத்து|ர் விநாயகபுரத்தை சேர்ந்த வெற்றிசெல்வன், நவநீதன், ஸ்ரீநாத், மூர்த்தி ஆகியோர் இணைந்து  ‘கம்போர்ட் டிராவல்ஸ் அன்ட் ஹாலிடே’ என்ற பெயரில்  டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களது நிறுவனம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பிரபலபடுத்தி வந்தனர். இதன் காரணமாக இவர்களிடம் பலர் வெளிநாட்டு வேலைக்காக தொடர்புகொண்டு லட்சகணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் அருகே உள்ள கடம்பாடி என்ற ஊரின் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இம்மானுவேல் என்பவரும் இவர்களிடம் வெளிநாட்டு வேலைக்காக பணம் கட்டியுள்ளார். ஆனால் இவர்களின் நடவடிக்கையில்  சந்தேகமடைந்து, சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் பலபேரிடம் பணம் பெற்றுகொண்டு போலியான பணி ஆணை, விசா வழங்கியது தெரியவந்தது. இதன்காரணமாக டிராவல்ஸ் நடத்தி வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு வேலை மோசடி மூலம் ரூபாய் 50 லட்சத்திற்கு மேல் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படும் இளைஞர்களை குறிவைத்தே புரோக்கர்கள், பல டிராவல்ஸ்கள் தமிழ்நாடு முழுவதும் உலா வருகின்றனர். எத்தனையோ பேர் போலியான விசா மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு, அங்கே பிரச்சினையில் சிக்கி அவதிடுகிறார்கள். இருப்பினும் வெளிநாட்டு மோகம் நம் மக்களிடையே குறைந்தபாடில்லை.