டில்லி

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து 6400 கோடி டாலர் முதலீட்டைத் திரும்பப்  பெற்றுள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் உலகெங்கும் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை எனக் கூறப்படும் அமெரிக்கப் பங்குச் சந்தை தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.  தற்போது வர்த்தகம் எப்போது சீரடையும் என்னும் நிலை இல்லாமல் உள்ளது.   எனவே பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குச் சந்தை முதலீட்டை வேறு இனங்களுக்கு மாற்றி வருகின்றனர்.

இந்திய நிறுவனப் பங்குகள் உலகச் சந்தையில் கடந்த வ்ருட்ம் டிசம்பர் வரை முடிந்த காலாண்டு காலத்தில் நல்ல விற்பனையைச் சந்தித்தது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து அது குறைந்தது.  கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் ஜனவரியில் 6300 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளும் பிப்ரவரியில் 1710 கோடி டால்ர் மதிப்பிலான பங்குகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கி உள்ளனர்.

அதே வேளையில் மார்ச் மாதம் மட்டும் சுமார் 8400 கோடி அளவிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர் விற்பனை செய்து தங்கள் முதலீட்டை இந்தியாவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர்.   மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் அளிக்கப்பட்ட முதலீடுகளை நீக்கி விட்டுப் பார்த்தால் மொத்தம் 6400 கோடி டாலர்கள் வரை முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இப்போது நடந்து வரும் காலாண்டில் சீனாவின் வர்த்தக முடக்கம் பங்குச் சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.   குறிப்பாக தற்போது கொரோனா பரவுதல் காரணமாக அமெரிக்கா சீனா மீது எடுத்து வரும் நடவடிக்கைகள் பங்குச் சந்தையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி உள்ளது.   எனவே இது குறித்து ஒரு முடிவு தெரியும் வரை சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தக முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.