டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று காலை 11 மணிக்கு  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

மத்திய அரசின் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் தொடர் கூட்டத் தொடர்  ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கியது.. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, இன்று ( பிப்ரவரி 1 ஆம் தேதி)  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதன்முறையாக அச்சு வடிவில் இல்லாமல், மின்னணு முறையில் (டிஜிட்டல்) முறையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை இன்று நாடாளுமன்றத்தில் நிதிஅமைச்சர் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் அடங்கிய லேப்டாப்புடன் நிதிஅமைச்சர்  நிர்மலா சீதாராமன் மற்றும் மோஸ் நிதி அனுராக் தாக்கூர் ஆகியோர் நிதி அமைச்சகத்திலிருந்து வெளியேறினர்.  பட்ஜெட் நகல் அனைவருக்கும்  டிஜிட்டல் வடிவில் ஆன்லைனில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட்  மற்றும்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது பட்ஜெட் என்பதுடன், இந்திய வரலாற்றில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டும் இதுவாகும்.

பட்ஜெட் கூட்டத் தொடரானது, மக்களவை பிற்பகலிலும், மாநிலங்களவை முற்பகலிலும் நடைபெற உள்ளது.   முதல்கட்ட தொடர்,  வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் 2வது கட்டத் தொடர் மாா்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.