சென்னை

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர்  நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் மற்றும் ஜெயம் ரவி ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இன்று 33,668 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 15,65,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 17,359 பேர் உயிர் இழந்து 13,39,887 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2,07,789 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.  அவர்களில் பல திரையுலக பிரபலங்களும் உள்ளனர்.

அவ்வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.  அத்துடன் நடிகர் ஜெயம் ரவி தனது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் எடிட்டர் மோகன் ஆகியோருடன் சென்று ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளார்.