கொலையில் முடிந்த ’சோத்து’ பிரச்சினை..

அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்து அங்குள்ள முந்திரி ஆலையில் வேலை பார்த்து வந்தனர்.

6 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள்.

அவர்களில் நரேந்திரா என்பவர் , சாப்பாட்டுப் பிரியர்.

அவர் ,மொத்த சாப்பாட்டில் நிறையச் சாப்பிட்டு, மற்றவர்களுக்கு, அரை வயிறு,கால் வயிறு சாப்பாடு மட்டுமே மிச்சம் வைப்பாராம்.

 ’’நீ மட்டும் ஃபுல் கட்டு கட்டுறே.. நாங்க பட்டினியா கிடக்கணுமா?’’ என்று சாஜஸ்நாத், சங்கர்நாத் ஆகிய இருவரும் தட்டி கேட்டுள்ளனர்.

‘’சாப்பிடுவதற்கு ஏற்ப வேலையும் பார்க்க வேண்டும்’’ என்று கூறி, நரேந்திராவுக்கு கூடுதல் சுமையைக் கொடுத்துள்ளனர், இருவரும்.

இதனால் கோபத்தில் இருந்த நரேந்திரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தூங்கிக்கொண்டிருந்த சாஜஸ்நாத், சங்கர்நாத் ஆகிய இருவரையும் இரும்பு தடியால் தாக்கியுள்ளார்.

 ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே சாஜஸ்நாத் இறந்து போனார். சங்கர்நாத்துக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சோற்று விஷயத்திற்காகக் கொலை செய்த நரேந்திராவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்