உதகை:
கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற 125 வது மலர்க்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

கோடை விழாவின் முக்கிய நிகழ்வான, உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவின் 125 வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. மலர் கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மலர்களை பார்வையிட்டனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 325 ரகங்களில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில், பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் டேலியா, பிக்கோனியா, ஜால்வியா, கிரைசாந்திமம், இன்கமேரி கோல்ட், பிரெஞ்ச் மேரி, கோல்ட் பெட்டூனியா, லில்லி துலீப் உள்ளிட்ட மலர் தொட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த மலர்க்கண்காட்சியை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில், உதகையில் நடைபெறும் மலர்கண்காட்சியினை குடும்பத்தினருடன் கண்டு ரசிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான வண்ண மலர்களை கண்டு ரசிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.