d
சென்னை:  மீன்பிடி தடைக்காலம் ஆரம்பித்திருப்பதை அடுத்து  மீன் விலை கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது.
வங்க கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு வருடமும்  ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி முதல் வங்க கடலின் ஆழ்கடலில் மீன்பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால்  கடந்த சில நாட்களாக மீன்களின் விலை கிலோவுக்கு  ரூ.100 வரை உயர்ந்துள்ளது.  இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க அமைப்பு  கூறியதாவது:-
“வங்கக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால், ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. அரபிக்கடல் பகுதியில் இருந்து கிடைக்கும் மீன்கள் வரத்து மட்டுமே உள்ளது.
குறிப்பாக, மங்களூர், மும்பை மற்றும் கேரளா மாநிலம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 20 -25 லாரிகளுக்கு மேல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது., ரெயில்கள் மூலமாகவும் விற்பனைக்கு மீன்கள் கொண்டு வரப்படுகிறது.
அவ்வாறு கொண்டு வரப்படும் மீன்கள் சென்னை உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வழக்கமான விற்பனை அளவுக்கு வரத்து இல்லை.
மத்தி – ரூ.120 , பாறை – ரூ.300 வரை, அயிலா – ரூ.200 வரை, இறால் – ரூ.400 வரை, நண்டு – ரூ.140 முதல் ரூ.180 வரை, கிழங்கா – ரூ.250 வரை, கொடுவாய் –  ரூ.500 வரை, கட்லா ரோகு – ரூ.120 , கிளிச்சை – ரூ.80, வஞ்சிரம் (பெரியது) – ரூ.600, வஞ்சிரம் (சிறியது) – ரூ.500, கருப்பு வவ்வால் (பெரியது) – ரூ.500, கருப்பு வவ்வால் (சிறியது) – ரூ.400, சீலா – ரூ.350, சங்கரா – ரூ.180 முதல் ரூ.220 வரை, என்று தற்போது விற்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
.