லண்டன்: உலகப் புகழ்பெற்ற அறிவியல் மையமான லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர்களுள் ஒருவராக, இந்தியாவிலிருந்து முதல் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டாக்டர்.கங்காதீப் காங்.

இவரைத்தவிர, மும்பையைச் சேர்ந்த பத்மபூஷன் விருதுபெற்ற டாக்டர்.யூசுஃப் ஹமீத் கெளரவ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் தவிர்த்து, இதர 4 இந்தியர்களும், ராயல் சொசைட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் ராயல் சொசைட்டியில் உறுப்பினராவதென்பது விஞ்ஞான உலகில் ஒரு மாபெரும் கெளரவமாகும். 10 வெளிநாட்டு நபர்களுடன் சேர்த்து, இந்த ஆண்டில், மொத்தம் 51 விஞ்ஞானிகள், ராயல் சொசைட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ராயல் சொசைட்டியில், ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், மைக்கேல் ஃபாரடே, எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டோரோதி ஹாட்கின், ஆலன் டூரிங் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி