டில்லி

முதல் முறையாக மக்களவையில் 37 அமர்வுகளில் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட சாதனை நிகழ்ந்துள்ளது.

இந்திய முதலாவது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 1952ஆம் வருடம் நடந்தது. அப்போது நடந்த 67 அமர்வில் மொத்தம் 24 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இது அப்போது ஒரு சாதனையாகக் கூறப்பட்டது. இந்தியாவின் 17 ஆவது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த மக்களவைக் கூட்டத்தில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை ஜம்மு காஷ்மீர் மசோதா, உடனடி முத்தலாக் தடை மசோதா, ஊதியச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத் திருத்த மசோதா, மற்றும் தகவல் அறியும் சட்டத் திருத்த மசோதா ஆகியவை ஆகும். இவ்வாறு 37 அமர்வுகளில் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 183 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டன.  ஒரு நாளைக்குச் சராசரியாக ஆறு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தொடரில் 70 மணி நேரம் 42 நிமிடங்கள் கூடுதல் நேரம் கூட்டம் நடந்துள்ளது. பல புதிய உறுப்பினர்களுக்கு ஜீரோ அவரில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் முறை தேர்வான 46 பெண் உறுப்பினர்களில் 42 பேருக்கு ஜீரோ அவரில் பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளன.

இம்முறை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் மக்களவையில் ஐந்து நாட்களில் 25 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதங்களும் நடந்துள்ளன. மாநிலங்களவையில் மூன்று மசோதாக்கள் ஒரே நாளில் தாக்கல்  செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றப்பட்டுள்ளது.