புதுடெல்லி: பாகிஸ்தான் வான்வழி திறக்கப்பட்டு, அதன் வழியே பறந்துவந்து, டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்தியாவிற்கான முதல் விமானம்.

கடந்த பிப்ரவரி 27 முதல் மூடப்பட்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் வான்வழிகள் சமீபத்திய ராஜதந்திர நடவடிக்கைகளின் வாயிலாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மேற்கு திசையிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைவதற்கு மொத்தம் 11 வான் வழிகள் உள்ளன. அவற்றுள் முதன்முதலாக திறக்கப்பட்டது டெலெம் வான்வழி. இந்த வழியாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்ட ஒரு இண்டிகோ விமானம் புதுடெல்லி வந்திறங்கியது.

அந்த விமானம் தரையிறங்கிய சிறிதுநேரத்தில், பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறையின் இயக்குநரிடமிருந்து, இந்திரா காந்தி விமான நிலையத்தில் அமைந்துள்ள இண்டிகோ விமான இயக்ககத்திற்கு ஒரு அழைப்பு வந்தது.

“நீங்கள் இன்னும் விழித்திருக்கிறீர்கள். விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. ரமலான் வாழ்த்துக்கள்!” என்று அந்த அதிகாரி பேசியிருக்கிறார்.