தாம்பரம்,
முதல்வர் உடல்நலம்பெற வேண்டி தாம்பரம் சானடோரியம் பகுதியில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சென்னை, தாம்பரத்தில் நடுரோட்டில் திடீரென தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தாம்பரம் கடப்பேரி மவுலானா நகர் 9வது தெருவைச் சேர்ந்த சற்குணம் என்ற அ.தி.மு.க. தொண்டர். நேற்று முன்தினம் இரவு  முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டிய தீக்குளித்தார். தனியார் கம்பெனி ஒன்றியல் காவலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு, மனைவி, ஒரு மகள் உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுக தொண்டர் சற்குணம்
அதிமுக தொண்டர் சற்குணம்

இதன் காரணமாக அதிமுக தொண்டரான சற்குணம், சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஏற்றுமதி வளாகத்தின் எதிரில் உள்ள சிக்னல் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்றார். அங்கு திடீரென நடுரோட்டில் தனது உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என கூச்சலிட்டபடி தீக்குளித்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த போலீசார்  உடனடியாக  தீயை அணைத்து, அவரை மீட்டனர். பின்னர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.