ஐதராபாத்:

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி ஆட்சி அமைக்க தெலுங்கானா முதல்வர் முயற்சி எடுத்து வரும் நிலையில், 3வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதை ஏற்கத் தயார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், கடைசி கட்டமான 7வது கட்ட வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது.அதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த நிலையில், மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகள் பேசி வருகின்றன. தேசிய கட்சிகளான   பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். சமீபத்தில் கேரள முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவரது 3வது அணி அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பன சூழலில்,  தெலுங்கானா கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபித்ரசூல்கான் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  மாநில கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, “கூட்டாட்சி முன்னணி” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை எங்கள் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் அடுத்த வாரம் சந்தித்து பேச இருக்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும்,  மத்தியில் அடுத்து மாநில கட்சிகளின் கூட்டாட்சி முன்னணிதான் ஆட்சியை பிடிக்கும். ஒரு வேளை மத்தியில் அரசைமைக்க எங்களுக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம். காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் அதைக் ஏற்றுக் கொள்வோம் என்றவர், ஆனால், காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு வெளியில் இருந்து தான் இருக்கும். எங்கள் அரசில் காங்கிரஸ் பங்கு பெறாது. காங்கிரசுக்கு டிரைவர் சீட்டில் அமரவோ, வேறு எந்த ஒருஅதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்.

அதுபோல பிரதமர் பதவியையும் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களில் யாராவது ஒருவர்தான் புதிய பிரதமராக பதவி ஏற்பார். நாங்கள் அதுபற்றி ஆலோசித்து ஒருமித்த அடிப்படையில் புதிய பிரதமரை தேர்ந்து எடுப்போம்.

காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது போல பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்க முன் வந்தால் ஒரு போதும் ஏற்க மாட்டோம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேருவதை நாங்கள் விரும்பவில்லை. மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க உதவிகள் எதுவும் செய்ய மாட்டோம். மாநில கட்சித் தலைவர்கள் அனைவரும் இதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம். என்று தெரிவித்தார்.

மேலும்,  பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதுபோல, மத்தியில் எங்களை ஆதரிப்பதை தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழி இல்லை. மத்தியில் கூட்டாட்சி முன்னணி ஆட்சி மலரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.