வாஷிங்கடன்:
கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி கூறியிருந்தார். தடுப்பூசி குறித்த தவறான செய்திகள், தகவல் பெருந்தொற்றாக இருப்பதாகக் கூறியிருந்த அவர், தொழில்நுட்ப நிறுவனங்களும், சமூக வலைத்தளங்களும் தவறான தகவல்கள் பரவுவதைத்தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவேக் மூர்த்தி வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பரவும் சமூக வலைத்தளங்கள் குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.  “அவர்கள் மக்களை கொல்கிறார்கள்” என பதிலளித்த பைடன், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மத்தியிலேயே பெருந்தொற்று இருப்பதாக குறிப்பிட்டார்.