ஸ்ரீநகர்

தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது தெரிந்ததே. நேற்று ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புக்களின் அதிகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.   இதில் (என் சி பி) தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கலந்து கொண்டார்.

ஃபரூக் அப்துல்லா தனது உரையில் “ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.  அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் தீவிரவாதிகள் குறி வைக்கின்றனர். எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மீண்டும் காஷ்மீரில் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகிறார்கள். மாநில மக்களின் எதிர்காலம் இதனால் என்னவாகும் என்பது தெரியவில்லை.  கடந்த 2018 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் என்சிபி கட்சி பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. நாங்கள்  அந்த தேர்தலில் பங்கேற்றிருக்க வேண்டும்.

அடுத்து காஷ்மீரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்சிபி கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீரில் தற்போது இருக்கும் கட்சிகளிலேயே மிகப்பெரியதும், மக்கள் செல்வாக்கு பெற்றிருக்கும் கட்சி என்சிபி மட்டுமே. ஆகும்” என கூறி உள்ளார்.