டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந் நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

மசோதக்களின் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியிலும் ஈடுபட்டதால் அவை 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.  பிற்பகல் 1.42 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் இறங்கினர்.

அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.