மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கடந்த 80களில் மிகவும் பிரபலமாக இருந்த பாலிவுட் நடிகர் கோவிந்தா.   அப்போதைய இளம் கன்னிகள் இடையே கனவுக்கண்ணனாக திகழ்ந்தவர் அவர்.   இவருடைய படங்களான, ஹம், கர்மே ராம், கலி மே ஷ்யாம் போன்ற படங்கள் நல்ல வெற்றி படங்கள் ஆகும்.

தற்போது 58 வயதாகும் கோவிந்தா கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து நடித்து வருகிறார்.  இவர் மொத்தம் 140க்கும் அதிகமான இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.  இவர் நடித்த ஆண்டி நம்பர் 1,  ஜோட் நம்பர் 1 போன்ற படங்கள் 90களில் வெளியாகின.

கோவிந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால்  கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இது குறித்து அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு, ”எனக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால் நானே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  எனவே தேவையான மருத்துவ  உதவிகளுடன் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்” எனப் பேட்டி அளித்துள்ளார்.  தற்போது அவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் உள்ளார்.