டில்லி,

2004ம் ஆண்டு தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது தனது கல்வி தகுதி குறித்து போலியாக குறிப்பிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது புகார் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் தனது கல்வி சான்றிதழ்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

அமைச்சர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது  போலி கல்வி சான்றிதழ் என  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி மீது புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய  மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி. இவர் மத்திய மனித வள மேம்பாட்டு முன்னாள் மந்திரியாக பதவி வகித்து வந்த போது,  தனது கல்விச் சான்றிதழ் குறித்து தேர்தல் கமிஷனுக்கு அளித்த 3 பிரமாண வாக்குபத்திரங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து இருப்பதாக,  அமெர்கான் என்ற எழுத்தாளர் சார்பில் டில்லி மெட்ரோலிபாலிடன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அவர் தான், 2004–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மனு தாக்கலின்போது, தான்  பி.ஏ. பட்டப்படிப்பை டில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் முடித்ததாக கூறி இருந்தார்.

அதையடுத்து  2011–ம் ஆண்டு டெல்லி மேல்–சபை தேர்தலுக்காக போட்டியிட்டபோது, டில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.காம். படித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

அதைத்தொடர்ந்து 2014–ல் அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தபோது, தான்  டில்லி பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி கல்வி முறையில் பி.காம். படித்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

ஒரு தடவை பிஏ என்றும் மற்றொரு தடவை பிகாம் என்றும் கூறியதால், அவர் படிப்பு குறித்து சர்ச்சை எழுந்தது.

இந்த மூன்று தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட  பிரமாண பத்திரத்திலும் 3 விதமாக கூறியிருப்பதன் மூலம் தனது படிப்பு பற்றி அவர் தவறான தகவல்களைத் தெரிவித்து உள்ளதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏயின்படி தண்டனைக்குரியது என்றும் கூறி அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை டில்லி விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இந்த படிப்பு விவகாரத்தில்,  ஏற்கனவே விசாரணை செய்த  விசாரணை நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்களை தாக்குதல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மனு மீதான விசாரணை வருகின்ற செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.