டெல்லி: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கனில் சிக்கியுள்ள  இந்தியர்களை மீட்க முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததும், அங்கு மீண்டும் தாலிபான் பயங்கரவாதிகள் தலைதூக்கத் தொடங்கினர். தொடர்ந்து பல மாகாணங்களை கைப்பற்றத்தொடங்கினர். தலைநகர் அமைந்துள்ள காபூலுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்ததும், அங்கிருந்து  அதிபர்  அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கனில் விரைவில் தலிபான்கள் ஆட்சி நடக்கும் என அறிவித்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பழமைவாதிகளான தாலிபான்கள் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆப்கனில் உள்ள வெளிநாட்டவர்கள், தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மேலும் ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்களே, அங்கிருந்து வெளியேற ஆசைப்படுகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களிடையே பதற்றமும், பீதியும் காணப்படுகிறது.

இதற்கிடையே ஆப்கனில் சிக்கியிருக்கும் பல்வேறு நாட்டு மக்களை அந்தந்தநாடுகள் விமானம் மூலம் வெளிேயற்றி வருகின்றனர். ஆப்கனில் தங்கியுள்ள இந்தியர்களை  மத்திய அரசு பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது. கடைசியாக ஞாயிற்றுக்கிழமை 160க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டது.

இந்த நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது, அங்குள்ள இந்தியர்கள் நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டிஆர் பாலு, என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார், அப்னா தளம் கட்சி சார்பில் அனுப் பிரியா, ஹெச்டி தேவேகவுடா, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அ ரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களிடையே ஆப்கன் நிலவரம் குறித்து விளக்கம் அளித்து பேசிய  அமைச்சர் ஜெய் சங்கர், ஆப்கனில் தற்போது சூழல் மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. தோஹா ஒப்பந்தத்தை மீறியும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் தலிபான்கள் செயல்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்துப் பணிகளையும் மத்திய அரசுஎடுத்து வருகிறது, அவர்களை மீட்க  அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்படும். இதுவரை ஆப்கனிலிருந்து இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த 175 பேர், 263 இந்தியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மீடப்பட்டுள்ளனர்.  ஆப்ரேஷன் தேவி சக்தி மூலம் 6 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான இந்தியர்களை அழைத்துவிட்டோம், சிலருக்கு விமானம் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரையும் தாயகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவர முயற்சிப்போம். ஆப்கன் மக்கள் சிலரையும் மீட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய டி.ஆர் பாலு, 20 ஆண்டுகளாக ஆப்கனில் இந்தியா மேற்கொண்ட திட்டங்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைப்பதாக மத்திய அரசு கூறுகிறது. பயங்கரவாதிகளின் மையமாக ஆப்கான் மாறிவிடக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.