சென்னை: கொரோனா பொது முடக்கம் காலத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை திரும்பும் பயணிகளில், 10 வயதுக்குட்பட்ட  குழந்தைகளுடன் வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிப்பதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் வந்தே பாரத் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமை முகாம்களில் வைக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு பிறகே வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில்,  10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள  அரசாணையில்,  உடனடி மருத்துவ தேவை உறவினர்கள் மறைவுக்கு வந்தோர், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மட்டுமே இதுவரை தனிமைப்படுத்துதலில் இருந்த விலக்கு அளிக்கப்பட்டதாகவும்..  இனி 10 வயதுக்குட்பட்ட குழந்தை களுடன் வருவோருக்கும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதே போன்று சென்னை வருவதற்கு முன்பு 96 மணி நேரத்திற்குள்  பிசிஆர் சோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்தோருக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.