டில்லி

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் திலிப் ரே குற்றவாளி என தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி என்னும் பகுதியில் பிரம்மதிகா என்னும் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது.  இந்த நிலக்கரி சுரங்கம் கடந்த 1999 ஆம் ஆண்டு கேஸ்டிரன் டெக்னாலஜி லிமிடெட் என்னும் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டது.  இதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போதைய வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக திலிப்ரே பதவி வகித்து வந்தார்.  அவர் மீதும் நிலக்கரி அமைச்சகத்தில் அப்போது பணி புரிந்த மூத்த அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி, மற்றும் நித்தியானந்தா கவுதம்,  கேஸ்டிரன் டெக்னாலஜி லிமிடெட் நிறுவன இயக்குநர் மகேந்திர குமார் உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று இந்த வழக்கில் நீதிபதி பாரத் பரஷார் வழங்கிய தீர்ப்பில் முன்னாள் பாஜக அமைச்சர் திலிப் ரே மீது கிரிமினல் சதி, மற்றும் ஊழல் புகார்களில் குற்றவாளி என அறிவித்துள்ளார்.  அத்துடன் மேலே குறிப்பிட்ட மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   வரும் 14 ஆம் தேதி இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.