மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதையொட்டி பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   முதல் கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதைத் தாண்டியோர் மற்றும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன   வரும் ஏப்ரல் முதல் மூன்றாம் கட்டமாக 45 வயதைத் தாண்டிய அனைவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான பரேஷ் ராவல் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் சூரரைப் போற்று என்னும் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.  தற்போது 65 வயதாகும் பரேஷ் ராவில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  ஆயினும் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

நடிகர் பரேஷ் ராவல், “யாரும் எதிர்பாராத வண்ணம், எனக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நான் என்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன்.  என்னுடன் கடந்த 10 நாளில் தொடர்பில் இருந்தோர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” எனக் கூறி உள்ளார்.