கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை…
ராஜதந்திரம் என்ன ராஜதந்திரம்….
எங்க எதிர்க்கட்சி காரங்ககூட சரசம் பண்ணது நீதானே ?…
2014ல் இருந்து இப்பவரை ரஷ்ய தாக்குதல் தொடருது எங்களைக் காப்பாற்ற என்ன பண்ணீங்க ?
இப்போ நிலைமையே வேற நாங்க நிறுத்தறோம்… நிறுத்திக் காட்டுறோம்…
என்ன உத்தரவாதம் ?
என்ன உத்தரவாதம் தரமுடியும்… இந்த நிமிஷம் தலைமேல் குண்டு விழாதுன்னு நிச்சயம் இல்லை…
நாங்க சொல்வதை ஏற்பதாக இருந்தால் டீல் போடலாம்… இல்லாட்டி இப்படியே கிளம்பலாம்…
சரி கிளம்பலாம்…
இவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே செய்தியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற வார்த்தைப் போரின் போது வெளியான வார்த்தைகள்.
டிரம்ப் – ஜெலன்ஸ்கி இடையிலான இந்த செய்தியாளர் சந்திப்பில் இருவருக்கும் இடையே 90 வினாடிகள் வரை நீடித்த காரசார வாக்குவாதம் தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் ரஷ்ய அதிகாரிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாட்களை அழைக்காமல் அமெரிக்கா தன்னிச்சையாக சவுதி அரேபியாவில் நடத்திய இந்த பேச்சுவார்த்தையை அடுத்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபரின் இந்த பேச்சு உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள நிலையில், ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக பிரிட்டன், ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.
அதேவேளையில், ஐரோப்பிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை துவங்கியுள்ள இந்தியா இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்து வருகிறது.