சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கோரி, ஆசிரியர்கள் போராட்டம் 6-வது நாளாக தொர்கிறது . இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை யினர் அவர்களை அங்கிருந்து அகற்றினர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமவேலைக்கு சம ஊதியம் என்ற விவகாரம் சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. இதை நம்பி ஆசிரியர்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தனர். ஆனால், திமுக அரசு வாக்குறுதியை இதுவரை ஏற்கவில்லை.
இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல இடங்களில் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த 26-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 27-ந்தேதி எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 28-ந்தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 29ந்தேதி சென்னை எழிலகம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் ஆகிய 2 இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

டிசம்பர் 30ந்தேதி எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு கல்லூரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். போராட்டக்காரர்களால் சாலை மறிக்கப்பட்டதால், அந்த வழியாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலையோரம் அமர்ந்து போராடி அறிவுறுத்தினர்.
சென்னை எழும்பூரில் நேற்று (டிச.30) போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸார், ‘அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்’ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனாலும், “எங்களை எதுவும் தடுக்காது; இப்போது இல்லையென்றால் எங்களுக்கு விடிவு காலம் எப்போது?” என்று முந்தைய காலக்கட்டங்களைவிட உறுதியுடன் போராடி வருகின்றனர் ஆசிரியர்கள்.
இந்த போராட்டம் குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:- எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இதுவரை விடுமுறை நாட்களில் போராடி வந்தோம். இனி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனாலும் நாங்கள் வேலை நாட்களில் விடுமுறை எடுத்து போராட்டத்தை தொடருவோம். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்தால் அமர்ந்து போராடுவோம். எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். புத்தாண்டு, பொங்கல் நாட்களிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
மேலும், “15 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கோருகிறோம். நியாயம் கேட்டுப் போராடினால் வழக்குப் பதிவு செய்கிறீர்களே. முந்தைய ஆட்சியில் எங்களை காவல் துறை மோசமாக நடத்தியபோது கண்டித்தீர்கள். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்கள் கண்ணீரைத் துடைப்பேன் என்றீர்களே. அந்த கண்ணீர் துடைக்கும் கரங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு, போராட்டக் களத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன.
[youtube-feed feed=1]சமவேலைக்கு சம ஊதியம்: எழிலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் …