டெல்லி: மேகதாது  அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி கோரி கர்நாடக அரசு அனுப்பிய விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும் காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது  அணை கட்ட கர்நாடக அரச முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்தாலும் கர்நாடக அரசு அதற்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பணிகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் மத்திய சுற்றுசூழல்துறை, நீல்வளத்துறையில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது.

இந்த நிலையில்,  மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கும் என அறிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அனைத்துக்கட்சி குழுவினர் இன்று டெல்லி சென்று நீர்வலத்துறை அமைச்சரை சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், மேகதாது அணை கட்ட அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து நீக்கி மத்திய சுற்றுச்சுழல் துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகமே அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை முடிவுசெய்யும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்தால் மட்டுமே சுற்றுச்சுழல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.