திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் யானை ஒன்று திடீரென மதம் பிடித்து ஓடியதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
இதில் பலர் காயம் அடைந்தனர். அந்த யானையின் பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
குருவாயூரில் உள்ள பிரசித்திப்பெற்ற கிருஷ்ணர் கோவிலில் தினசரி அலங்கரிக்கப்பட்ட யானையின் மூலம் சாமி கிருஷ்ணரின் சிலை பூஜைக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த நிகழ்ச்சி கழச்சா சீவேலி என்று அழைக்கப்படுவதுண்டு.
அதன்படி நேற்று காலை பூஜைக்காக அலங்கரிக்கப்பட்ட கோபி கண்ணன், ரவி கிருஷ்ணன், ஸ்ரீகிருஷ்ணன் 3 யானைகள் கோவிலினுள் அணிவகுத்து நின்றன.
அதில் கோபிக்கண்ணன் யானைமீது கிருஷ்ணன் சிலை வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட இருந்தது. இந்நிலையில் திடீரென கோபி கண்ணன் என்ற யானைக்கு மதம் பிடித்து அங்கும் இங்கும் ஓடியது.. அதை கட்டுப்படுத்த முயன்ற பாகனின் மார்பில் தந்தத்தால் குத்தியது.
இந்நிலையில், மற்ற 2 யானைகளும் ரகளையில் ஈடுபடத் தொடங்கின. தற்போது சபரிமலை சீசன் என்பதால் கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
யானைகள் மதம் பிடித்து ஓடியதன் காரணமாக கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அங்கும் இங்கும் பாதுகாப்பு தேடி ஓடினர். இதில் பலர் காயமடைந்தனர்.
மதம் பிடித்த கோபிகண்ணன் யானை பகவதி அம்மன் கோவில் வழியாக ஓடியது. இதன் காரணமாக அதன் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணன் சிலை கீழே விழுந்து சேதமடைந்தது.
இது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மற்ற பாகன்கள் சேர்ந்து மதம் பிடித்த யானைகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து கோபி கண்ணன் யானையின் நான்கு கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அழைத்துச் சென்றனர்.
சுமார் 30 நிமிடங்கள் இந்த களேபரம் நீடித்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய பதற்றம் சுமார் 9 மணி அளவில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு பாரம்பரிய முறைப்படி பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
யானையின் தாக்குதலுக்கு ஆளான யானை பாகன் உடினயாக அருகிலுளள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின், மேல் சிகிச்சைக்காக திரிசூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக கூறப்படுகிறது.