போபால்

லைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் திட்டமிட்டு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையைச் செயல்படுத்துவதற்கு பெரும் சவால்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் அதிகாரிகள் போபால் சென்றுள்ளனர்,  நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது அவர்.

“மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குறித்த காலத்துக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும். 

இது புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெறும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். இக்காலக்கெடு முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம். சட்டசபை தேர்தல்களுக்கு இதே வழிமுறை பொருந்தும்.

அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயாராக இருக்கிறோம். 

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்குவதைப் பற்றி வாக்காளர்களுக்குத் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அதற்கான செலவினங்கள் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றையும் கட்சிகள் குறிப்பிட வேண்டும்.  தேர்தல்களில் இலவசங்கள் தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தையும் எட்டி இருக்கிறது.”

என்று தெரிவித்தார்.