இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்திருந்தார்.

இந்த மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள சூர்யமூர்த்தி “அதிமுக உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாகத் தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் நான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

சூர்யமூர்த்தி-யின் இந்த மனு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வரும் 25ம் தேதி விசாரணை நடைபெற உள்ள நிலையில் சூர்யமூர்த்தி மனு தொடர்பாக தங்கள் கருத்து மற்றும் பதிலை அனுப்புமாறு அதிமுக-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சமயத்தில் இரட்டை இலை சின்னம் குறித்து அதிமுக-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.