டில்லி

இன்று 3 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.வரும் ஜனவரி 1 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு பங்கேற்கவுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.