டெல்லி: பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா இன்று இரண்டாக உடைந்துள்ள நிலையில், கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை, ஷிண்டே தலைமை யிலான அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது,  சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றிய சிவசேனா, அதிகார போதை காரணமாக, பாஜகவை விட்டு விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த ஆட்சி நீடிக்கவில்லை. சிவசேனா கட்சியின் பெரும்பானலா எம்எல்ஏக்கள், ஷிண்டே தலைமையில், உத்தவ்தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், தாக்கரே தலைமையிலுழனு ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இதையடுத்து, கட்சி பெயர், சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதில், பெரும்பான்மை உடைய ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை  ஒதுக்கியது. இந்த நிலையில், அடுத்த நடவடிக்கையாக, ஷிண்டே அணியினருக்கு சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகத்தை மக்களவைச் செயலகம் ஒதுக்கியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைவர் ராகுல் ஷெவாலே எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மக்களவை செயலகம், நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவசேனா அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட அறை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.