சென்னை:
ரூ.385 கோடி 63 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள  திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 385 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொளி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017–18ம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019–20ம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019–20ம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அம்மாவின் அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 8.68.22 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இம்மருத்துவக் கல்லூரி நிறுவிட மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியை வழங்கும், எஞ்சிய 190 கோடியே 63 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும்.
இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட 385 கோடியே 63 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதலையும், முதல்கட்டமாக 70 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்தும் 18.12.2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடங்கள் 143 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டடங்கள் 165 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டடங்கள் போன்றவை 77 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.