சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் நெருங்கிய உறவினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  இன்று  காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதை பஞ்சாப் முதல்வர் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை குறிவைத்து சோதனை நடைபெறுவதாகவும், இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரண்ஜீத் சிங் சன்னி இருந்து வருகிறார். அங்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பஞ்சாப் நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. மாநில முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் உறவினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக மண் குவாரிகள் நடத்துவது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர் சிங் ஹனி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் சன்னி,  அமலாக்கத்துறையினர்  என்னை குறிவைத்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எனக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இதை எதிர்த்து போராட தயாராக உள்ளோம்.  ஏற்கனவே மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் போதும் இதேதான் நடந்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.