கொச்சி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து விசாரணை நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். அவருடைய நீதிமன்ற காவல் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

எனவே அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது.

அமலாக்கத்துறை கொச்சியில் கைது செய்யப்பட்ட அசோக் குமாரைச் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.