சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஜிஎஸ்டி முறையை இந்தியா பின்பற்றலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுமைக்கும் ஒரே வரியாக ஜிஎஸ்டி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.   அந்த முறையில் இந்தியாவில் 5% 12% 18% 28% என பல பிரிவுகளில் ஜிஎஸ்டியை வகுக்கப்பட்டு உள்ளது.  .ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் பல மாறுதல்கள் செய்யப்படுவதால் அதிக குழப்பம் நீடித்து வருகிறது.

அதே வேளையில் சிங்கப்பூர் அரசு அனைத்து தயாரிப்புகளுக்கும் ஒரே அளவில், 7 சதவீத வரி விகிதத்தைப் பின்பற்றி வருகிறது.

இது குறித்து  இன்சிடர் பார்ட்னர்ஸ் என்ற ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அபிஜித் நாத், வணிகப் போக்கை எளிமையாக்கவும், குழப்பம் ஏற்படாத வகையிலும் இந்தியா அதன் ஜிஎஸ்டி முறையை மாற்ற வேண்டும். இப்போதுள்ள நிலையில் இந்தியா அதிகபட்சமாக இரு விகித அளவில் ஜிஎஸ்டி முறையை திட்டமிட வேண்டும் எனக் கூறி உள்ளார்.

சட்ட அலுவலகமான ‘சிலானா சிலானா’ நிர்வாக பங்குதாரர் சந்தீப் சிலானா, ”இந்தியாவில் குறைந்தபட்ச வரி விகித முறையை நோக்கி நகர வேண்டும்.   பல நாடுகள் அதன் வருவாயைக் கணக்கில் கொண்டு ஒரே அளவிலான ஜிஎஸ்டியை அனைத்து பிரிவுகளுக்கும் உருவாக்கி உள்ளன. அதே வேளையில் இந்தியா ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியே பல் வேறு அடுக்குகளில் ஜிஎஸ்டியை உருவாக்கி உள்ளது. இந்தியா மாற்றி 6 சதவீதம் மற்றும் 14 சதவீதம் என இரு அளவுகளில் ஜிஎஸ்டியை நடை முறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மற்றொரு நிறுவனமான சென்டெனியல் ஆசியா அட்வைசர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனு பாஸ்கரன்,”உண்மையில் ஜிஎஸ்டி மிகச் சிறந்த வரி முறை ஆகும்.   ஆனால் அவை சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும். அவ்வகையில் இந்தியாவுக்குச் சிங்கப்பூர் முன்னுதாரண நாடாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.