எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பழனிச்சாமி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மீது 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்று தனது முடிவை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் இந்த முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்பை பொறுத்து மாறுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.