டில்லி

தேர்தலின் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இருந்தே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளைப் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்ளவோ, சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யவோ, முழக்கம் எழுப்பவோ, பேரணிகளில் ஈடுபடுத்துவதையோ அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். 

பிரசார மேடைகளில் பேச வைப்பது, முழக்கமிட வைப்பது, பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது, பாடல் பாட வைப்பது, கவிதை பேச வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயலிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளைக் கையில் தூக்கிச் செல்வது, பிரச்சாரம் மற்றும் பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. 

ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களின் அருகிலோ, கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் அது விதி மீறல் இல்லை” 

எனத் தெரிவித்துள்ளது.