சென்னை: பத்திர பதிவின்போது, இரண்டு கருவிகளில் விரல் ரேகை பதிவு செய்யும் நடவடிக்கை  அக்டோபர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தமிழக பதிவுத்துறை, 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.. அதன்படி, பத்திரப்பதிவு மற்றும் பட்டா பிரதி தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பத்திரப்பதிவின்போது,  ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் எல்ஒ. கருவியுடன், புதிதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள   ‘எல்1’ கருவியில் விரல் ரேகை  என இரு கருவிகளில் விரல் ரேகை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறை   அக்டோபர்  1 முதல் அமலுக்கு வருகிறது.

பத்திரப்பதிவு தொடர்பான ஆவனங்கள் ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில், அதன் காரணமாக சில நடைமுறை சிக்கல்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பாக  நில அளவைத்துறை அதிகாரிகள் எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில்,  பதிவுத்துறை புதிய ஆணைகளை வெளியிட்டு உள்ளது.

பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொருமனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவுகிறது.  இதனால் நேரில் ஆய்வு செய்வதால்,  உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற கால தாமதத்தை தவிர்க்கும் வகையில்,  தமிழ்நாடு அரசு,  தமிழ் நிலம் என்ற இணையதள வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ‘தமிழ் நிலம்’ சாப்ட்வேர் வாயிலாக பட்டா பிரதிகள், ஆன்லைன் முறைக்கும் மாற்றப்பட்டிருக்கின்றன.  எனினும், அட்டெஸ்டேஷன் என்று சொல்லப்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு, சார் – பதிவாளர்கள் வலியுறுத்துவதால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்குவதற்காகவும் அலைய வேண்டியுள்ளது.

பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைலேயே எளிய முறையில் கிடைக்கும்போது, அதை பிரதி எடுத்து வரச் சொல்வது தேவையில்லாத ஒன்றாகவும் கருதப்படு கிறது.  இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து புதிய நடைமுறையை பதிவுத்துறை கொண்டு வந்துள்ளது.  இதுதொடர்பாக பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் ,  “பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும்போது, பட்டா, சிட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றின் காகிதப் பிரதிகளை கேட்க வேண்டாம். இந்த சொத்துக்களின் சர்வே எண்ணை பயன்படுத்தி, வருவாய்த் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் பட்டா விபரங்களை, சார் – பதிவாளர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் காகிதப் பிரதி கேட்டு, பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 இதனிடையே, பதிவுத்துறை இன்னொரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது..

அதன்படி,  “ஆதார் ஆணைய பரிந்துரையின்படி, எல்.ஓ., எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாட்டை, செப்டம்பர் 30ல் நிறுத்தப் போவதாக, ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக, ‘எல்1’ என்ற புதிய விரல் ரேகை பதிவு கருவிகளை, அக்., 1 முதல் பயன்படுத்த, ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, எல்காட் மின்னணு கழகம் வாயிலாக, புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன . ‘ஸ்டார் 2.0’ மென்பொருளில், இந்த புதிய கருவியை இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதில், ‘எல்1’ கருவியில் விரல் ரேகை விபரங்களை சேமித்து வைக்கும் வசதி இல்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும், எல்.ஓ., கருவியையும் சேர்த்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அக்., 1 முதல் இந்த இரண்டு கருவிகளிலும் விரல் ரேகை பதிவு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/2-major-announcement-by-tamil-nadu-registration-department-and-asking-copy-of-bond-for-deed-registr-639437.html