சென்னை

இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வார விடுமுறையையொட்டி 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) சுபமுகூர்த்தம் உள்ளிட்ட நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகின்றன.

இவ்வாறு தினசரி  இயக்கக் கூடிய பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 550 சிறப்புப் பேருந்துகளும், மேற்கூறப்பட்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூருவிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து ஆக மொத்தம் 750 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து  சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை இன்று பயணம் செய்ய 9 ஆயிரத்து 679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் நாளை 5 ஆயிரத்து 468 மற்றும் வருகிற 18-ந்தேதி  8 ஆயிரத்து 481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

”தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ”  

என்று கூறப்பட்டுள்ளது.