சென்னை

ன்று மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

நாடெங்கும் உள்ள தொழிற்சங்கங்கள்,  ”விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டு”ம் என்பன  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து 28, 29 ஆகிய 2 நாள்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. இன்று தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்பதால், வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பணிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.  குறிப்பாகத் தமிழகத்தில் தி.மு.க. தொழிற்சங்கமான எல்.பி.எப்., கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இன்று தொடங்கிய வேலைநிறுத்த போராட்டத்தில் இந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  எனவே பேருந்து போக்குவரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இன்று சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் திங்கள்கிழமை என்பதால், வேலைகளுக்குச் செல்லும் மக்களும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அனைத்து பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது..

இன்று வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. அதன்படி சென்னையில் இன்று11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி சுமார் 15 ஆயிரம் காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். நாடெங்கும் நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்க இருப்பதாகத் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.