சென்னை: கொரோனா பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு பொருட்களை வழங்க ஆசிரியர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, பள்ளி, கல்லூரிகள் ஜனவரி 31ந்தேதி வரை மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு பணியிடை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஜனவரி மாதத்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.